Search This Blog

Showing posts with label History. Show all posts
Showing posts with label History. Show all posts

Saturday, October 23, 2010

நபிதோழர்கள் -ரபீஆ பின் கஅப் அல்-அஸ்லமீ


 

ரபீஆ பின் கஅப் அல்-அஸ்லமீ

رَبِيعَةُ بْنُ كَعْبٍ الأَسْلَمِيُّ

மதீனாவிற்கு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புலம்பெயர்ந்ததும் பள்ளிவாசல் ஒன்று கட்டினார்கள். அந்தப் பள்ளிவாசலின் பின்புறத்தின் வடபகுதியில் சற்றே உயர்ந்த ஓர் வெற்றிடம் இருந்தது. அதன் பெயர் அஸ்ஸுஃப்பா.

பள்ளிவாசலின் பின்புறச் சுவரை ஒட்டிய திண்ணை, மேலே நிழலுக்கான ஒரு தடுப்பு - அதுதான் அஸ்ஸுஃப்பா. இங்கு அனாதரவான முஸ்லிம் ஆண்கள் தங்கி, வாழ்ந்து வந்தார்கள். தொடக்கத்தில் மக்காவை விட்டு வெளியேறி, மதீனா வந்திருந்த முஹாஜிர்கள்தாம் அங்குத் தங்கியிருந்தனர். பின்னர், வசதி வாய்ப்பில்லாத மற்ற முஸ்லிம்கள் சிலரும் அங்கு வந்து தங்கிவிட்டார்கள். அனைவரும் ஏழைகள். குடும்பம், உறவு என்று எதுவும் அவர்களுக்கு அமைந்திருக்கவில்லை. ஸுஃப்பாதான் அவர்களுக்குத் திண்ணை, பள்ளிக்கூடம், வீடு எல்லாமே. அவர்களெல்லாம் "அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா - أصحاب الصفة" என்று அழைக்கப்பட்டனர் - அதாவது திண்ணைத் தோழர்கள்.

சுவர் போன்ற தடுப்பு என்று எதுவும் இல்லாததால் எப்பொழுதும் காயும் வெயில், எப்பொழுதாவது பெய்யும் மழை, குளிர்காலத்தின் கடுங்குளிர், புழுதிக் காற்று என்று அனைத்துப் பொழுதும் அங்குதான் அவர்கள் வாழ்க்கை. மானம் மறைக்கும் அளவு மட்டுமே உடை. மற்றவர்கள் அவ்வப்போது கொண்டு வந்து அளிக்கும் உணவுதான் ஆகாரம் என்று அங்கு இஸ்லாத்தைப் பயின்று கொண்டிருந்தனர் அவர்கள். முஹம்மது நபியும் மற்றத் தோழர்களும் உணவு கிடைத்தால் இவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். வேறு சிலர் அவ்வப்போது பேரீச்சம் பழக்கொத்தைக் கொண்டுவந்து அங்கு நடப்பட்டிருக்கும் ஒரு தூணில் மாட்டிவிட்டுச் செல்வார்கள். இவர்களும் ஆளுக்கு ஒன்றோ, இரண்டோ சாப்பிட்டுப் பசியாறிக் கொள்வார்கள்.

சில சமயங்களில் உணவென்று எதுவும் இல்லாமல் நாட்கள் கழியும். பசியில் அவர்களது வாட்டம் எந்தளவு இருக்குமென்றால், தொழுகையின்போது மயக்கமுற்றும் விழுந்துவிடுவார்கள். சரி இப்படியெல்லாம் வாடும் இவர்கள், தொழுகை, வழிபாடு என்பது போலான ஓர் ஆன்மிக வாழ்க்கையை மட்டும் சார்ந்தவர்களோ, துறவி போன்றவர்களோ என்றால் அப்படியெல்லாம் இல்லை. போர் என்று அறிவிப்பு வந்தால், "படைக்கு முந்தி" என்று துள்ளியெழுந்து வந்து நின்றார்கள்.

அந்தத் திண்ணைப் பல்கலையில் பயின்று வந்த மேன்மக்கள் ஏராளம். நமக்குப் பரிச்சயமான கப்பாப் இப்னு அரத் (ரலி) அவர்களில் ஒருவர். பிலால், அபூஹுரைரா போன்ற புகழ்பெற்ற தோழர்களும் ஸுஃப்பாவாசிகள்தாம். பிற்காலத்தில் முதலாவது கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அபூபக்ரு (ரலி) அவர்களின் மகன் அப்துர் ரஹ்மானும் இந்தத் திண்ணையில் ஒருகாலத்தில் வாழ்ந்தவர்; வளர்ந்தவர். இவர்களுக்கு நபியவர்களின் அண்மை பெரும் பேறாய்த் தோன்றியது. விண்ணிலிருந்து இறங்கிய ஞானத்தை, முஹம்மது நபியின் நேரடிப் பரிமாறுதலில் பசி தீர்த்துக் கொண்ட சிறப்பு விருந்தினர்கள். அதற்காகக் காலமெல்லாம் அங்கேயே கிடந்து உழலத் தயாராயிருந்த மாபெரும் உன்னதர்களின் கூட்டம் அது.

பின்னர் காணப்போகும் மற்றத் தோழர்களின் வாழ்க்கையை உணரவும் அவசியமென்பதால்தான் இங்கு ஸுஃப்பா பற்றி இந்த அறிமுகம். ஆக, இத்தகையப் பல்கலையின் மற்றொரு முக்கிய மாணவர் ரபீஆ பின் கஅப்.

அப்போது இளவயதுச் சிறுவர் ரபீஆ. முதல் பார்வையில் வெகுசிலரை நமக்குப் பிடித்துப் போகும். அதேபோல் சிலரைப் பார்க்கும்போதே தகுந்த காரணமின்றி நமக்கு வெறுப்பேற்படும். முதன் முதலாய் முஹம்மது நபியைப் பார்த்ததுமே கவர்ந்திழுக்கப்பட்டார் ரபீஆ. உள்ளத்தை இஸ்லாமிய ஆன்மீகம் ஆக்கிரமிக்க, அவருக்கு உள்ளம் கவர்ந்த தலைவன் ஆகிப் போனார் முஹம்மது நபி. வேறு எது பற்றிய சிந்தனையும் இல்லை. சதா சர்வ காலமும் அல்லாஹ்வின் தூதரைப் பற்றிய எண்ணமும் பிரமிப்புமே அவர் மனதை ஆக்கிரமித்திருந்தன. அந்தளவுக்கு அந்தத் தலைவர்மீது அவரது மதிப்பும் மரியாதையும் மிகைத்தது. அந்த அவஸ்தையை அவரால் தாங்க முடியவில்லை. மனம் இறுதியாகக் கூறியது:

"ஏன் இந்தத் தொல்லை?. அவருக்குப் பணிவிடை செய்ய உன்னை ஒப்படைத்துக் கொண்டு இந்தப் பிரச்சனையை ஏன் நீ இலேசாக்கிக் கொள்ளக் கூடாது? போ அல்லாஹ்வின் தூதரிடம். பணிவிடை செய்யும் ஊழியனாய் உன்னை நீ அவருக்கு அர்ப்பணிப்பதாய்ச் சொல். அவர் மட்டும் ஒப்புக்கொண்டால், அவரைக் கண்ணாரக் கண்டுகொண்டே இருக்கும் ஆனந்தம் உனக்குக் கிட்டும். அவரது அன்பையும் அரவணைப்பையும் அடையலாம். இம்மை-மறுமையின் நற்பேறு உனதாகும்".

வருணிக்க எழுதப்பட்ட வார்த்தைகள் அல்ல இவை. வரலாற்றுக் குறிப்புகள் அவரது வாழ்க்கையை அவரது வார்த்தைகளிலேயே பதிவு செய்து வைத்துள்ளன.

இந்த எண்ணம் தோன்றியவுடன் தாமதிக்கவில்லை ரபீஆ. நபியவர்களை விரைந்து சென்று சந்தித்து, தன் எண்ணத்தை வெளியிட்டார். பேராவலிலும் நம்பிக்கையிலும் அவர் மனது படபடத்தது. நம்பிக்கை வீண் போகவில்லை, ஏற்றுக் கொண்டார் முஹம்மது நபி. உலகின் தலைசிறந்த பல்கலையின் மாணவனாக நேரடி அனுமதி கிடைத்துவிட்டது ரபீஆவிற்கு. சரி, தங்கிப் பயில விடுதி? கிடைத்தது திண்ணை. திண்ணைத் தோழரானார் ரபீஆ பின் கஅப், ரலியல்லாஹு அன்ஹு!

நிழல்போல் தொடர்வது என்று உவமைக்குச் சொல்வோமே, அப்படி நபிநிழலாகிப் போனார் ரபீஆ. நபியவர்களுடன் நெருக்கமாகத் தங்கி, எங்கெல்லாம் அவர் சென்றாரோ அப்படியே இவர் பின்தொடர்ந்தார். நபியவர்கள் இவரைப் பார்த்தாலே போதும்; இவர் எழுந்து அவரிடம் ஓடினார். அவரது எந்த அலுவலாக இருந்தாலும் சரி, ஏதாவது செய்ய வேண்டுமென்றாலும் சரி, விரைந்து சென்று உதவுவது ரபீஆவின் இயல்பாகி விட்டது. சுருக்கமாக, தன்னை முழுக்க முற்றும் அர்ப்பணித்துக் கொண்ட பணிவிடை.

வேறு எதுபற்றிய சிந்தனையும் இல்லை. உலகம் பற்றிய அக்கறை இல்லை. அல்லாஹ்வும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு இரத்தமும் சதையுமாய் தனது கண்ணெதிரே நடமாடும் நபியும்தான் அவரது உடல், ஆவி, மூச்சு அனைத்திலும் வியாபித்திருந்தனர்.

தேடித் தேடி பணிவிடை செய்வதாக நாள்முழுவதும் கழியும். நாள் முடிந்து இரவின் இறுதி இஷாத் தொழுகை முடிந்து நபியவர்கள் வீட்டிற்குச் சென்று விடுவார்கள். அடுத்து என்ன செய்வது? முதலில் திரும்பி விடலாம் என்று நினைப்பார். பின்னர் அவரது மனதில் அந்த எண்ணம் தோன்றும்:

"ரபீஆ ஏன் போகிறாய்? அனேகமாய் இரவில் அவருக்கு ஏதாவது உதவி தேவைப்படலாம்" அவ்வளவுதான். இந்த எண்ணம் தோன்றியவுடன் நபியவர்களது வீட்டு வாசலிலேயே அமர்ந்து விடுவார். இறைவனின் மாபெரும் நபி, அரண்மனை, மாளிகை, சேவகர்கள் என்பதெல்லாம் எதுவுமே இல்லாமல் தனது எளிய குடிலுக்குள் புகுந்து கொள்ள, வாயிற்படியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு தோழர்.

தனது அந்த அனுபவத்தை ரபீஆ விவரிக்கும் போது, "நபியவர்கள் இரவில் எழுந்து நின்று தொழுது கொள்வார்கள். சில வேளைகளில் அவர்கள் சூரா அல்-ஃபாத்திஹா ஓதுவதைக் கேட்பேன். அதை அவர்கள் இரவின் பெரும்பாலான பகுதியில் தொடர்ந்து ஓதிக் கொண்டே இருப்பார்கள். சிலவேளை 'தன்னைப் புகழ்ந்தவனை அல்லாஹ் செவிமடுத்தான்' என்பதை சூரா அல்-ஃபாத்திஹாவை விட அதிகமாக உச்சரிப்பார்கள், அதைக் கேட்டுக் கொண்டே அப்படியே அசந்து உறங்கி விடுவேன்"

இப்படியாக அவரது காலம் கழிந்து கொண்டிருந்தது.

தனக்கு உபகாரம் செய்பவர்களுக்கு அதைவிட அதிக அளவில் திருப்பி நல்லுபகாரம் செய்வது நபியவர்களின் இயல்பு. தனது நன்றியை அவர்கள் அப்படித்தான் வெளிப்படுத்துவார்கள். ரபீஆவின் சேவையைப் பாராட்டி எப்படி வெகுமதி அளிப்பது? ஒருநாள் அவரிடம் வந்தார்கள் முஹம்மது நபி.

"ரபீஆ!" என்று அழைக்க,

"இதோ உங்கள் சேவைக்கும் கீழ்படிதலுக்கும் தயாராக உள்ளேன் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு அளவற்ற நற்பேறுகளை நல்குவானாக!" என்று பதிலளித்தார் ரபீஆ.

சற்று கவனிக்க வேண்டும். வெறும் பெயர் சொல்லி அழைக்கிறார் நபி. "செவிமடுத்தேன், அடிபணிந்தேன்" என்று ஓடி வருகிறார் தோழர். குர்ஆனின் வாசகங்கள் மூச்சாய் ஓடிக்கொண்டிருந்த இதயங்கள் அவை.

"நான் உனக்கு அளிக்கும்படியாய் ஏதாவது கேளேன்" என்றார் முஹம்மது நபி.

சற்று சிந்தனையில் மூழ்கியவர், "எனக்குச் சற்று அவகாசம் அளியுங்கள் அல்லாஹ்வின் தூதரே. எனக்கு என்ன தேவை என்று யோசித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்குத் தெரிவிப்பேன், இன்ஷா அல்லாஹ்!"

"நல்லது"

அந்தச் சமயத்தில் ஏழ்மையான நிலையில் இருந்த இளைஞர் ரபீஆ. வீடு, மனைவி, சொத்து, சுகம் என்று எதுவும் கிடையாது. சக ஏழை முஸ்லிம்களுடன் ஸுஃப்பாவில் வாழ்ந்து கொண்டிருந்தார். மக்கள் இவர்களை "இஸ்லாத்தின் விருந்தினர்கள்" என்று அழைப்பார்கள். யாராவது முஸ்லிம் கொஞ்சம் பணம் கொண்டு வந்து தானமாய் நபியவர்களிடம் அளித்தால், அதை அவர்கள் இந்தத் திண்ணைத் தோழர்களின் செலவினங்களுக்கு அளித்து வந்தார்கள். ஏதாவது அன்பளிப்புக் கிடைத்தால் மட்டும், அதில் சிறிதைதான் எடுத்துக் கொண்டு மீதம் அனைத்தையும் இவர்களுக்குக் கொடுத்து விடுவார்கள்.

அதனால் ரபீஆவிற்குத் தோன்றியது. ஏதாவது கொஞ்சம் பணமோ, பொருளோ நபியவர்களிடம் கேட்போம். கிடைத்தால், ஏழ்மையிலிருந்து மீண்டு, மற்றவர்கள்போல் பணம், மனைவி, குழந்தைகள் என்று வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

ஆனால், மீண்டும் மனம் அதை மறுபரிசீலனை செய்தது. பிறகு சொன்னது:

"உன்னை நீயே அழித்துக் கொள்ளப் போகிறாய் ரபீஆ! இந்த உலக வாழ்க்கை - அது தானாக ஓடிவிடும். இந்த வாழ்க்கையில் செல்வம் என்று உனக்குப் பங்கு ஒன்று நிர்ணயிக்கப்பட்டிருந்தால், நீ கேட்டாலும் சரி; கேட்காவிட்டாலும் சரி, அல்லாஹ் உனக்கு அளித்து விடுவான். உனக்கு நன்றாகத் தெரியும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விற்கு எவ்வளவு பிரியமானவர் என்று. அவர் கோரினால் அவன் நிராகரிக்கப் போவதில்லை. ஆகவே நீ அவரிடம் என்ன கேட்க வேண்டுமென்றால், அல்லாஹ் உனக்கு மறுமையின் வெகுமதியில் பங்கு அளித்தருள அவரைப் பிரார்த்திக்கச் சொல்ல வேண்டும்"

ஆஹா! இதுதான் சரி என்று அவருக்குப் பட்டது. சொற்ப காலத்துக்கான அற்ப செல்வமெல்லாம் வேண்டாம், அனைத்தையும் "அங்கு" வாங்கிக் கொள்வோம் என்ற இந்த முடிவு அவருக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. தெளிவாக இருந்தது. நேராக நபிகளாரிடம் சென்றார்.

அவர் ஒரு முடிவெடுத்து வந்திருப்பது நபிகளாருக்குப் புரிந்தது "என்ன கேட்க விரும்புகிறாய் ரபீஆ?" என்று கேட்டார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். என்னை சொர்க்கத்தில் தங்களின் தோழனாக அவன் ஆக்கி அருள வேண்டும்"

புரிகிறதா? அந்த வேண்டுகோளின் பேராசை புரிகிறதா? உலக இச்சை, பட்டுப் போயிருக்கட்டும். மறுமையில் எத்தகைய நம்பிக்கை இருந்திருந்தால், அந்த மறுமையிலும் அந்த மாமனிதரின் அண்மைதான் சொர்க்க மகா சொர்க்கம் என்று மனதில் நேசம் இருந்திருந்தால் இப்படி ஒரு வேண்டுகோள் பிறக்கும்?

முஹம்மது நபி சற்று நேரம் அமைதியாக இருந்தார்கள். பிறகு,

"உனக்கு வேறு ஏதும் வேண்டுகோள் இல்லையா ரபீஆ?"

"இல்லை அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களிடம் கேட்டதிலிருந்து எனது மனதை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை"

"அப்படியானால் சரி. நீ வேண்டியதை உனக்கு நான் பெற்றுத்தர, நீ எனக்கு உதவ வேண்டும். அதிகமதிகம் நஃபில் தொழுகையும் ஸஜ்தாவும் நீ புரிய வேண்டும்" என்று நபிகளாரிடமிருந்து இறுதி பதில் வந்தது.

பெருமையும் மகிழ்வும் ஏற்பட்டது ரபீஆவிற்கு! அந்த நொடியிலிருந்து உறுதியான இறைவழிபாடு என்பது அவரது சுபாவமாகவே ஆகிவிட்டது. அவரது இலக்கெல்லாம் ஒன்று. ஒன்றே ஒன்று! இப்பொழுது இந்த உலகில் நபியவர்களுடன் பணிவிடை செய்து அண்மிக் கிடக்கும் பாக்கியம் கிடைத்ததுபோல் மறுஉலகிலும் அவரது தோழமை கிடைக்கவேண்டும், அவ்வளவே! வெறும் சொர்க்கம் அல்ல. சிறப்புச் சொர்க்கம்.

சில நாட்களோ, மாதமோ கழிந்தன. முஹம்மது நபி அவரிடம் கேட்டார்கள். "உனக்குத் திருமணம் புரிந்து கொள்ள ஆசை இல்லையா, ரபீஆ?"

"தங்களுக்கு சேவை செய்வதிலிருந்து எனது கவனத்தைத் திருப்பும் எதையும் நான் விரும்பவில்லை அல்லாஹ்வின் தூதரே! தவிர ஒரு மணப்பெண்ணுக்கு மணக்கொடை அளிக்க, அவளை வாழவைக்க என்று என்னிடம் பணமும் இல்லை" என்று பதிலளித்தார் ரபீஆ. முஹம்மது நபி அமைதியாக இருந்து விட்டார்கள்.

"என்னது? திருமணம் செய்து கொள்ள மாப்பிள்ளை எதற்குப் பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும்?" என்று கேட்கக்கூடாது. வியாபாரிகளுக்குத் திருமணம் விளங்குவதில்லை.

மீண்டும் சில நாட்கள் கழிந்தன. மீண்டும் முஹம்மது நபி அவரிடம் கேட்டார்கள். "உனக்குத் திருமணம் புரிந்து கொள்ள ஆசை இல்லை, ரபீஆ?"

ரபீஆவும் அதே பதிலை மீண்டும் கூறிவிட்டார். ஆனால் பின்னர் தனிமையில் இருக்கும் போதுதான் இவ்விதம் நபியவர்களிடம் மறுதலித்துப் பேசியிருக்கக் கூடாதோ என்று ரபீஆவிற்கு மன உளைச்சல் ஏற்பட்டது. அது அவருக்கு மிகுந்த வெட்கத்தை அளித்தது. மனதுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

"அட ரபீஆ! உனது ஆன்மீகத்திற்கும் இவ்வுலகிற்கும் மறுமைக்கும் எது சிறந்தது என்று நபியவர்கள் உன்னைவிடச் சிறப்பாய் அறிய மாட்டார்களா? உன்னுடைய ஏழ்மையும் பொருளாதார நிலைமையும்கூட அவர்கள் அறிந்ததுதானே. ஆம். அல்லாஹ்வின் மீது ஆணையாக! மீண்டும் ஒருமுறை நபியவர்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி பரிந்துரைத்தால் நிச்சயம் கட்டுப்படுவேன்" என்று இறுதியில் அவரது மனம் சமரச உடன்படிக்கை செய்து கொண்டது.

மீண்டும் சில நாட்கள் கழிந்தன. மீண்டும் முஹம்மது நபி அவரிடம் கேட்டார்கள்: "உனக்குத் திருமணம் புரிந்து கொள்ள ஆசை இல்லையா, ரபீஆ?"

"நிச்சயமாய் திருமணம் செய்து கொள்கிறேன் அல்லாஹ்வின் தூதரே! ஆனால் நான் இன்று இருக்கும் நிலையில் யார் எனக்குப் பெண் தருவார்கள்?" என்று கவலை தெரிவித்தார் ரபீஆ.

ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சொல்லி, அவ்வீட்டிலுள்ள ஒரு குறிப்பிட்ட பெண்ணைச் சொல்லி, "அவர்கள் வீட்டிற்குப் போ. அல்லாஹ்வின் தூதர் உங்களின் இந்தப் பெண்ணை எனக்குத் திருமணம் செய்து தரும்படி கட்டளையிட்டார் என்று கூறு" என்று தெரிவித்தார்கள் முஹம்மது நபி.

மிகவும் கூச்சமாய் இருந்தது ரபீஆவிற்கு. மெதுவாய் அவர்களின் வீட்டிற்குச் சென்றார். தயக்கமாய்த் தெரிவித்தார். "அல்லாஹ்வின் தூதர் என்னை அனுப்பி வைத்தார்கள். உங்களின் இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்துத் தருவீர்களாம்" என்று அந்தக் குறிப்பிட்ட பெண்ணின் பெயரைத் தெரிவித்தார்.

"அந்தப் பெண்ணையா!?" என்று அவர்கள் ஆச்சரியமாகக் கேட்க, "ஆம்" என்றார் ரபீஆ.

"அல்லாஹ்வின் தூதர் எங்களது வீட்டில் சிறப்பு விருந்தினராய் வரவேற்கப்படுபவர். அதேபோல்தான் அல்லாஹ்வின் தூதரின் தூதரும். அல்லாஹ்வின் மீது ஆணையாக, இந்தத் தூதர் ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பப்பட மாட்டார்" என்று உற்சாகப்பட்ட அந்தக் குடும்பத்தினர் உடனே அந்தக் குறிப்பிட்ட பெண்ணை இவரது மனைவியாக்கி, திருமண உடன்படிக்கை எழுதிவிட்டனர்.

நம் மொழியில் சொல்வதென்றால், பஞ்சத்தில் அடிபட்டவரைப் போன்ற ஒரு மகா ஏழை, வீட்டிற்கு வருகிறார். நபி சொன்னார் என்று பெண் கேட்கிறார். உடனே அந்த வீட்டினரோ "நீதானய்யா மாப்பிள்ளை" என்று திருமண உடன்படிக்கையே எழுதிவிட்டார்கள். அப்படிக் கட்டுப்பட்டுக் கிடந்தார்கள் தம் தலைவரின் சொல்லுக்கு.

மாப்பிள்ளையோ சீர் தருவார்களா, செனத்தி தருவார்களா என்று யோசிக்கவில்லை, "எப்பேறுபெற்ற தலைவனின் எப்பேறுபெற்ற தொண்டன் நான்", "எவ்வளவு வரதட்சனை எண்ணி வைப்பார்கள்" என்று கேட்கவில்லை. தான் பெண்ணுக்கு மணக்கொடை தரப் பணமில்லையே என்று விசனப்படுகிறார். மனைவியாகி வரும் பெண்ணுக்கு எப்படி உணவளிப்பது என்றுதான் கவலைப்படுகிறார்.

வேகமாக நபியவர்களிடம் திரும்பிய ரபீஆ, "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மிகச் சிறந்த குடும்பத்தைக் கண்டுவிட்டுத் திரும்பி வந்திருக்கிறேன். என்னை நம்பினார்கள், அன்பொழுக வரவேற்றார்கள், அவர்கள் வீட்டுப் பெண்ணை எனக்கு மணமுடிக்க உடனே திருமண உடன்படிக்கையும் எழுதித் தந்து விட்டார்கள். நான் இப்பொழுது மணக்கொடை பணத்திற்கு என்ன செய்வேன்?" என்றார்.

புரைதா இப்னுல் ஹஸிப் என்பார் பனூ அஸ்லம் எனும் கோத்திரத்தின் தலைவர். ரபீஆவும் அஸ்லமீதான். அந்த புரைதாவை வரவழைத்தார்கள் முஹம்மது நபி. அவர் வந்து சேர்ந்தார்.

"புரைதா! ரபீஆவிற்குத் திருமணம் செய்ய வேண்டும். தயவுசெய்து ஒரு பேரீச்சம்பழ விதை அளவிற்கான தங்கம் ஏற்பாடு செய்து கொடு" என்று தெரிவித்தார்கள்.

அப்படியே ஆகட்டும் என்று அவரும் ஏற்பாடு செய்து கொண்டு வந்து கொடுத்தார். நபியவர்கள் அதை ரபீஆவிடம் கொடுத்து, "இதை அவர்களிடம் எடுத்துச் செல். அவர்களின் மகளுக்கு இது நீ தரும் மஹர்-மணக்கொடை என்று ஒப்படை".

வாங்கிக் கொண்டு அவர்களிடம் சென்றார் ரபீஆ. அந்தப் பேரீச்சம்பழ விதை அளவிற்கான தங்கத்தைக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட அவர்களோ அகமகிழ்ந்தார்கள். "இருந்தாலும் ரொம்ப அதிகம் இது. தவிரவும் தரமான தங்கமாகவும் தோன்றுகிறதே"

நபிகளாரிடம் திரும்பி வந்த ரபீஆ கூறினார். "இத்தகைய பெருந்தன்மையான குடும்பத்தை நான் சந்தித்ததே இல்லை. ஏதோ தேற்றி எடுத்துப் போய்க் கொடுத்த அந்த மிகச் சிறிய அளவு தங்கத்தை அவர்கள் அப்படி சிலாகிக்கிறார்கள். மிகவும் அதிகமாம். தரமான தங்கமாம். அது இருக்கட்டும். இப்பொழுது எனக்கு அடுத்த கவலை வந்து விட்டது. எப்படி நான் திருமண விருந்து அளிக்கப் போகிறேன் அல்லாஹ்வின் தூதரே?"

மீண்டும புரைதாவிடம் பேசினார்கள் நபியவர்கள். பணம் ஏற்பாடு செய்தார் புரைதா. பிறகு அதைக் கொண்டு ஒரு நல்ல கொழுத்த செம்மறியாட்டுக்கடா ஒன்றை வாங்கி வந்தார் ரபீஆ. பிறகு நபியவர்கள் அவரிடம் கூறினார்கள்: "ஆயிஷாவிடம் சென்று வீட்டில் எவ்வளவு வாற்கோதுமை இருக்கிறதோ கேட்டு வாங்கி வா"

அதன்படி அவர் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அம்மையாரிடம் செல்ல, அவர்கள், "அந்தக் கூடையில் ஏழு சாஉ(படி) வாற்கோதுமை இருக்கிறது, எடுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக, இதைத் தவிர உமக்கு அளிக்கும் வகையில் வீட்டில் வேறு எதுவும் உணவு இல்லை" என்றார்.

ஒரு சாஉ என்பது தோராயமாய் இரண்டு கிலோ 350 கிராம். ஆக மாப்பிள்ளை ரபீஆ கிடாவையும் பதினாறேகால் கிலோ வாற்கோதுமையும் எடுத்துக் கொண்டு மணப்பெண் வீட்டிற்கு உற்சாகமாய்ச் சென்றார். அவர்கள், "கோதுமையைக் கொடுங்கள், நாங்கள் வேண்டுமானால் ரொட்டி சுட்டுத் தருகிறோம். ஆனால் நீங்கள்தான் ஆட்டை அறுத்து இறைச்சி எடுத்துக் கொண்டு வரவேண்டும்" என்றார்கள். ரபீஆவும் அவர் கோத்திரத்தின் உறவினர்கள் சிலரும் சென்று ஆட்டை அறுத்து, இறைச்சி சமைத்து எடுத்துவர, விருந்தொன்று பிரமாதமாய் தயாரானது. அளவற்ற நெகிழ்ச்சி ஏற்பட்டது ரபீஆவிற்கு. ஒன்றுமே இல்லாமல் கிடந்தவருக்கு விருந்தினர்களையெல்லாம் அழைத்து விருந்தளிக்கும் அளவு ரொட்டியும் இறைச்சியும் கிடைத்ததென்றால்? இல்லாதவனுக்குத்தான் அதன் அருமை தெரியும்.

இதையெல்லாம் படித்துவிட்டு, "தலைகீழ்க் கலாச்சாரமய்யா அரபு நாட்டுத் திருமணமுறை" என்ற நினைப்புத் தோன்றினால், சற்றேனும் சிந்திக்க முடிந்தால் புரியும் - தலைகீழாக மாறி, கெட்டுக் குட்டிச்சுவராகிப்போய்க் கிடப்பது நம் கலாச்சாரம்தான் என்று.

நபியையும் விருந்திற்கு அழைத்தார் ரபீஆ. அன்புடன் கலந்து கொண்ட முஹம்மது நபி, பின்னர் அவருக்கு அன்பளிப்பொன்றும் அளித்தார்கள். ஒரு சிறு அளவு நிலம். அந்த நிலம் அபூபக்ருஸ் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹுவின் நிலத்திற்குப் பக்கத்தில் அமைந்திருந்தது. அது அன்பளிப்பாய்க் கிடைத்தது ரபீஆவிற்கு. வறுமையில் கிடந்த அவருக்கு இவை அனைத்தும் பெரும் செல்வமாய்த் தோன்றியது. உள்ளார்ந்த அகமகிழ்வும், ஏதோ பெரும் செல்வந்தனாகி விட்டதைப்போன்ற உணர்வும் அவருக்கு ஏற்பட்டது. இனிதே இல்லறம் துவங்கினார் ரபீஆ.

சிலநாள் கழிந்திருக்கும். ஒரு பிரச்சனை ஏற்பட்டது ரபீஆவிற்கு. அந்த நிலத்தில் ஒரு ஈச்சமரம் இருந்தது. அபூபக்ரின் நிலமும் ரபீஆவின் நிலமும் அருகருகே இருந்ததால் அந்த மரம் யார் நிலத்திற்கு உரியது என்பது பிரச்சனையாகி விட்டது. சர்வேயர், எண் இட்ட எல்லைக்கல் எதுவும் இல்லாத காலம் அது. ரபீஆ அந்த மரம் தன்னுடையது எனக் கூற, அபூபக்ரோ அது தன்னுடைய நிலத்தில் உள்ளது என்று வாதிட்டார். விவாதம் சற்றுச் சூடேற, அபூபக்ரு வாய் தவறி ரபீஆவைப் பற்றிச் சுடுசொல் ஒன்று கூறிவிட்டார். அவ்வளவுதான். ஆனால் வாயிலிருந்து வார்த்தை வெளியே விழுந்த அடுத்த கணமே தன் தவறு புரிந்து விட்டது அபூபக்ருக்கு.

"ஆமாம்! வாய் தவறி சொல்லிவிட்டேன். அதற்கு என்ன இப்பொழுது? யாருடைய மாமனார் நான்? அவரிடம் எனக்குள்ள செல்வாக்கு என்ன தெரியுமா?" என்றெல்லாம் பெருமை பேசி அகலவில்லை அபூபக்ருஸ் ஸித்தீக். பிரச்சனை முற்றிலும் திசைமாற ஆரம்பித்து விட்டது.

"இதோ பார். நான் உன்னை இகழ்ந்து ஒரு சொல் சொல்லிவிட்டேன். நீயும் என்னை ஒருமுறை இகழ்ந்து சொல்லிவிடு போதும். பழி தீர்ந்து விடும். நமக்குள் நாளை பிரச்சனை இருக்காது" அந்த 'நாளை' மறுநாள் அல்ல, மறுமையின் நாளை.

அபூபக்ரின் தரம், அவரது பெருமை, அவரது தியாகம், நபிகளிடம் அவருக்குள்ள சிறப்புத் தகுதி இதெல்லாம் அறியாதவரா ரபீஆ. ஏதோ, கோபத்தில் வாய் தவறி சொல்லிவிட்டார். அதற்காக, அவரை அதேபோல் நாமும் திட்டுவதாவது? "ம்ஹும்! அதெல்லாம் முடியாது" என்று மறுத்துவிட்டார் ரபீஆ.

"என்னைத் திட்டப் போகிறாயா இல்லையா?"

"முடியாது!"

"அப்படியென்றால் நான் நபிகளிடம் முறையிட வேண்டியிருக்கும்" என்று கிளம்பிவிட்டார் அபூபக்ரு. எதற்கு? தான் திட்டியதற்கு ரபீஆ பதிலுக்குத் திட்டி கணக்கைச் சரிசெய்ய மறுக்கிறார், அவருடைய கணக்கை நேர் செய்து தன்னைக் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுவிக்க மறுக்கிறார். இது அநியாயமல்லவா? என்று நியாயம் கேட்பதற்கு.

நபிகளைக் காண்பதற்கு அபூபக்ரு விறுவிறுவென்று நடக்க, அவருக்குப் பின்னால் ரபீஆ வேகவேமாய் ஓட, அவருக்குப் பின்னால் ரபீஆவின் கோத்திரத்தினர் சிலர் கோபத்துடன் பின்தொடர, "நல்ல வேடிக்கை இது" என்பதுபோல் அந்த ஈச்சமரம் மட்டும் காற்றில் தன் கீற்றுகளை அசைத்துக் கொண்டிருந்தது.

"அவர்தான் முதலில் உம்மை இகழ்ந்து பேச ஆரம்பித்தவர். இப்பொழுது அவரே உம்மை முந்திக்கொண்டு உம்மைப் பற்றி நபியவர்களிடம் முறையிடச் செல்கிறாரா?" என்று ஆவேசமுடன் கேட்டனர் ரபீஆவின் உறவினர்கள்.

நின்றார் ரபீஆ. அவர்களை நோக்கித் திரும்பினார். "அமைதியாய் இருங்கள்! நீங்கள் யாரைப் பற்றிப் பேசுகிறீர்கள் தெரியுமா? அவர் அஸ்-ஸித்தீக். பெருமதிப்பிற்குரியவர். உயர்வானவர். அவர் உங்களை எல்லாம் திரும்பிப் பார்ப்பதற்குள் ஓடிவிடுங்கள். நீங்களெல்லாம் அவருக்கு எதிராய் எனக்கு ஆதரவளிக்கக் கூட்டம் திரட்டி வருகிறீர்கள் என்று அவருக்குத் தெரிந்தால் கோபம் ஏற்படலாம். அவர் கோபப்பட்டால், நபிகளும் கோபப்படலாம். அத்துடன் அழிந்தேன் நான். ஏனெனில் நபிகளை அவமதித்து விட்டேன் என்று அல்லாஹ்வின் கடுங்கோபம் என் தலைமேல் விழலாம்"

தங்களின் தலைவனையோ, தங்களது குழுவையோ ஆதரிப்பதாக நினைத்துக் கொண்டு, பாட்டில்களை வீசி, வாகனங்களில் ஆயுதங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு ஊர் உலா வரும் உத்தியெல்லாம் அறியாத சுத்தமான போர்க்கள வீரர்கள் அவர்கள். "சரி சரி. நீரே போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வாரும்" என்று சொல்லிச் சென்று விட்டார்கள்.

அபூபக்ரு சென்றார். நபிகளைச் சந்தித்தார். நடந்ததெல்லாம் கூறி முறையிட்டுவிட்டு அழுதார். அழுதது மரத்தை மீட்டுத் தரச் சொல்லி அல்ல; "ரபீஆவை என்னைத் திட்டச் சொல்லுஙகள்" என்று கோரிக்கையிட்டு.

வந்து சேர்ந்தார் ரபீஆ. நபிகள் கேட்டார்கள், "ரபீஆ, உனக்கும் அஸ்-ஸித்தீக்கிற்கும் இடையில் என்ன பிரச்சனை?"

"அல்லாஹ்வின் தூதரே! அவர் என்னை இகழ்ச்சியாகப் பேசியதைப்போல், நான் அவரைப் பேச வேண்டுமாம். நான் மறுத்துவிட்டேன்"

"நீ நன்று செய்தாய் ரபீஆ! உன்னை இகழ்ந்தவரை பதிலுக்கு நீ இகழ்ந்து பேசாதே! மாறாய், அல்லாஹ் அபூபக்ரின் பிழை பொறுக்கட்டும் என்று சொல்லிவிடு"

உடனே உரைத்தார் ரபீஆ: "அல்லாஹ் உமது பிழை பொறுக்கட்டும் அபூபக்ரே!"

கண்கள் குளமாகியிருந்தன அபூபக்ருக்கு. "அல்லாஹ் உமக்கு மாபெரும் கைம்மாறு வழங்கட்டும் ரபீஆ! அல்லாஹ் உமக்கு மாபெரும் கைம்மாறு வழங்கட்டும்" என்று அழுதுகொண்டே சென்றார் அபூபக்ரு.

திண்ணைப் பள்ளியின் பட்டதாரியல்லவா? குணம் மிகைத்தது. அந்த மரத்தைவிட உயர்ந்து உயர்ந்து நெடுந்தோங்கி நின்றது.

ரலியல்லாஹு அன்ஹு!

நன்றி;;;; சத்தியமார்க்கம்.காம்

Tuesday, June 29, 2010

மறக்கடிக்கப்பட்ட தியாகி பதக் மியான்:

 
-----
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

 

அன்புச்சகோதரர்களுக்கு :

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

(இறைவனின் சாந்தியும்சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

 

பாட்னா:1917 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் இரு தலைவர்கள்- ஒருவர் மகாத்மா காந்தி மற்றொருவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். இருவரும் பீகார் மாநிலத்தின் அன்றைய சம்பரன் மாவட்டத்தின் தலைநகராக விளங்கிய மோடிஹாரிக்கு செல்கின்றார்கள்.

இண்டிகோ பண்ணைத் தோட்டத்தில் வேலைப்பார்த்து வந்த தொழிலாளர்களின் மோசமான நிலையை கண்டறிவதற்காக சென்றார்கள். அவர்களின் நிலையைக் கண்டு அதற்கு காரணமான பிரிட்டீஷ் அரசிற்கெதிரான போராட்டத்தை துவக்கினார்கள். இதுதான் பிரிட்டீஷாருக்கு எதிராக காந்தியடிகள் துவக்கிய முதல் போராட்டமாகும்.

இண்டிகோ பண்ணைத் தோட்டத்தின் மேலாளராக பொறுப்பு வகித்த வெள்ளைக்காரன் காந்தியை இரவு உணவுக்கு அழைக்கிறான். காரணம் காந்தி சாப்பிடப்போகும் உணவில் விஷம் கலக்கப்பட்டு அவரைக் கொல்வதுதான் அவனது நோக்கமாகும். அந்த பிரிட்டீஷ் மேலாளரான ஆங்கிலேயனிடம் சமையல்காரராக வேலைப்பார்த்தவர் பதக் மியான். அவரிடம் ஒரு கோப்பை பாலில் விஷம் கலந்து காந்திக்கு கொடுக்குமாறு கூறுகிறான்.ஆனால் பதக் மியானின் தேசப்பற்று இந்தக் கொடுஞ்செயலுக்கு இடம் தரவில்லை. அவர் கோப்பையை எடுத்துச்சென்று காந்தியிடம் விஷயத்தை கூறிவிடுகிறார். இதற்கு டாக்டர் ராஜேந்திரபிரசாத் நேரில் கண்ட சாட்சியாவார்.

இதன் மூலம் பதக் மியான் காந்தியின் உயிரை காப்பாற்றுகிறார். காந்தியின் உயிர் காப்பாற்றப்பட்டதால் காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய அங்கமாக விளங்கி இந்தியாவின் தேசத்தந்தை எனப் போற்றப்படுகிறார். ஆனால் இச்சம்பவத்திற்கு பின்னர் பதக் மியான் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதாயிற்று.

பதக் மியான் காந்திஜிக்கு விஷம் கொடுக்காததால் பிரிட்டீஷ் மேலாளர் கடும் கோபம் அடைந்து பதக் மியானை சிறையிலடைத்து கடுமையாக சித்திரவதைச் செய்கிறார். அவருடைய வீடு சுடுகாடாக மாற்றப்பட்டது. பின்னர் அவரும் அவருடைய குடும்பமும் அவர் வாழ்ந்து வந்த கிராமத்தை விட்டும் துரத்தப்பட்டனர். இந்திய தேசபிதாவின் உயிரைக் காப்பாற்றிய அந்த மனிதர் மறக்கடிக்கப்பட்டார்.

ஆனால் காந்தியைக்கொன்ற நாதுராம் கோட்சேவை தெரியாத நபர் இல்லை எனலாம். 1950 ஆம் ஆண்டு டாக்டர் ராஜேந்திரபிரசாத் ஜனாதிபதியாக இருக்கும்பொழுது மோடிஹாரிக்கு சுற்றுப்பயணம் சென்றபொழுது பதக் மியானின் தன்னலமற்ற தியாகத்திற்காக 24 ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக அளிக்க உத்தரவிட்டார்.

60 ஆண்டுகள் தாண்டிவிட்டன, இதுவரை மறைந்த ஜனாதிபதியின் உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. மறக்கடிக்கப்பட்ட அந்தத்தியாகி 1957 ஆம் ஆண்டு மரணித்துவிட்டார். தற்பொழுது அவருடைய ஐந்து பேரர்களும் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள அக்வா பர்ஸாவ்னி கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள். தனது அன்றாட வாழ்க்கைக்காக இடம் புலர்ந்து தொழிலாளர்களாக வேலைப்பார்த்து வருகிறார்கள்.ஏனெனில் இவர்களுக்கு கல்வியறிவு இல்லை. அவர்கள் அரசு அதிகாரிகளைச் சென்று பார்த்து முறையிட்டபொழுது அவர்களுடைய அனைத்து முயற்சிகளும் வீணானதுதான் மிச்சம்.

சமீபத்தில் இந்தியாவின் ஜனாதிபதியான பிரதீபா பாட்டீல் இவர்களின் பரிதாப நிலையை அறிந்து இந்தியாவின் முதல் ஜனாதிபதியால் அன்பளிப்பாகக் கொடுக்க உத்தரவிட்ட நிலம் அவர்களுக்கு கிடைக்க உறுதியளித்துள்ளார். இது காந்திஜியின் 62-வது நினைவுதினத்திற்கு எட்டு நாட்களுக்கு முன்பு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற பத்திரிகை பதக் மியான் குடும்பத்தின் மோசமான நிலையைப் பற்றி வெளியிட்ட கட்டுரையைப் படித்த பிறகு தான் பிரதீபா பாட்டீல் உத்தரவிட்டார்.

ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரி அர்ச்சனா தத்தா சம்பரன் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டுகளுக்கு பீகார் அரசு ஜனாதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்துகிறதா என்பதை பற்றி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பீகார் முதல்வரும் இவ்விஷயத்தில் அக்கறையோடு திர்ஹுட் டிவிசனல் கமிசனருக்கு பதக் மியானின் குடும்பத்திற்கு உதவுமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுமா அல்லது காந்திஜியின் அடுத்த நினைவுதினம் வரை கிடப்பில் போடப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

source:twocircles
 

இறைவா! 

என் நிலையையும் 
நினைப்பையும் சமப்படுத்துவாயாக.
நீ நாடியிருந்தால்
நிலையை உயர்த்து.
ஒரு போதும் 
நினைப்பை உயர்த்தி விடாதே!
 
இவண்

M.மும்மது ஸ்மாயில்
மனிதனே! நீ உன் இரட்சகனிடம் செல்லும் வரையில்(நன்மையோ தீமையோ) 
பல வேலைகளில் ஈடுபட்டு கஷ்டத்துடன் முயற்சி செய்துகொண்டே இருக்கின்றாய்.
பின்னர் மறுமையில் அவனை நீ சந்திக்கிறவனாக இருக்கிறாய்..!(திருக்குர்ஆன் 84-6)



Monday, May 03, 2010

அஹ்மத் தீதத்

 

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDNr9TPKCmtB_SdodMHVQhHcmw0xWROCyLhdNVmjzupIRkPttpOOPN__WugWnx_HahjyYvtq-c4GoB3Nf-i3SvKhMAkyFM5echSVe2-T5Qn-oboGhFHNQK0xwNKUOfMNCAJJc5/s320/Bismillah_2.JPG

 

அஹ்மத் தீதத்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்

 

பதிவிற்கு செல்லும் முன், சில தினங்களுக்கு முன் இஸ்லாத்தை தழுவிய Prof.பெரியார்தாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரை இறைவன் என்றென்றும் நேர்வழியில் இருக்கச் செய்வானாக...ஆமின்...       

 

அஹ்மத் தீதத் அவர்கள், 

 

  • ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரணம்
  • ஒரு முஸ்லிமின் மன உறுதிக்கு எடுத்துக்காட்டு
  • எண்ணற்றவர்களை தாவாஹ்  பணிக்கு அழைத்து வந்தவர்
  • எண்ணற்றவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து வந்தவர் 
  • கிருத்துவ மிசனரிகளை எப்படி எதிர்க்கொள்வது என்று கற்றுத் தந்தவர்களில் ஒருவர்.
  • தென் ஆப்பிரிக்காவில் ஒரு வலிமையான, நேர்த்தியான இஸ்லாமிய சமூகத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்.

 

அஹ்மத் தீதத் (Ahmed Deedat, 1918-2005) அவர்கள் இந்தியாவில் பிறந்தவர், தென் ஆப்ரிக்காவில் வளர்ந்தவர். IPCI (Islamic Propagation Centre International, Durban, South Africa) யை நிறுவியவர். 

 

1980-1996 இடையேயான காலக்கட்டம் இவரது தாவாஹ் பணியில் முக்கியமானது. இந்த காலக்கட்டத்தில் தான் தீதத் அவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து பல பிரபல கிருத்துவ மிசனரிகளுடன் பல்வேறு தலைப்புகளில் விவாதம் மேற்கொண்டு அவர்களை திணறடித்தார். ஒவ்வொரு விவாதமும் நம் அறிவுக்கு உணவு, ஒவ்வொரு கேள்வியும் கூர்மை.          

 

இன்றளவும் இவரது நூல்கள் மற்றும் விவாத வீடியோக்கள் உலகளாவிய முஸ்லிம்களுக்கு கிருத்துவ மிசனரிகளை எதிர்க்கொள்ள உதவுகிறது. இன்றளவும் இவரது நூல்களை படித்து பைபிளை பற்றி அறிந்துகொண்டு, இஸ்லாமை படிக்கத் துவங்கியவர்கள் பலர்.

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8HuyaSr9kX0A_syK8P_DRlqVuwT0qD3AcG95H-aXB-jvU4LkPTLEIVV7HaE8zG8-vmWt6d97GQpTJCR9ig-gOPcv2xzFXFy8t_ogtAReurCsI0TN7TyLzhd0EdJ75xtDVI-xp/s400/220px-Choice_deedat.jpg

 

இன்றளவும் இஸ்லாத்திற்கு வரும் கிருத்துவர்களில் பலர், தாங்கள் அஹ்மத் தீதத் அவர்களின் நூல்களை/வீடியோக்களை படித்ததாலேயே/பார்த்ததாலேயே பைபிளின் மற்றொரு பக்கத்தை பற்றி அறிந்து கொண்டோம் என்றும், இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள ஆர்வப்பட்டோம் என்றும்  கூறுவதை பார்க்கலாம்.          

 

இங்கு அவரது சில விவாதங்களில் இருந்து சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்...    



1. Ahmed Deedat and Tele-Evangelist Jimmy Swaggard, at University of Louisiana USA, November 1986.
Debate Title: Is the Bible God's Word?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw22iMdANSbwQlQzrI7lR99ZFl5FSSSSDm1VwiRSeAGhpQmzrdX5Y1LT3Fewa4lLP96RrEI-XNptUb3jP7aW91SWckZUkAA6o8u85cljawY8sBMNEjYCoSL_McQd4AI-_HCL0g/s320/vlcsnap-83643.png

அமெரிக்காவின் லூசியானா பல்கலைகழகத்தில் ஜிம்மி ஸ்வாகர்ட் (Jimmy Swagard) அவர்களுடன் அஹ்மத் தீதத் அவர்கள் கலந்து கொண்ட விவாதம் சுவாரசியமானது. ஜிம்மி ஸ்வாகர்ட், அன்றைய காலத்தில் அமெரிக்காவில் மிகப்  பிரபலமானவர். தொலைக்காட்சியில் தோன்றி கிருத்துவத்தை போதித்து வந்தவர் (Tele Evangelist).  

 

விவாதத்தின் நடுவே ஜிம்மி ஸ்வாகார்ட் அவர்கள் பின்வருமாறு கூறினார்,

 

"நான் இந்த விவாதம் ஆரம்பிக்கும் முன் அஹ்மத் தீதத் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன், அப்போது அவரிடம் கூறினேன், மிஸ்டர் தீதத் உங்கள் மதம் நிறைய பெண்களை மணமுடிக்க உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது என்று, அப்போது தீதத் அவர்கள் குறுக்கிட்டு நான்கு வரை மட்டுமே என்றார். 


நான் கூறினேன், பாருங்கள் தீதத் உங்கள் மதம் நான்கு பெண் வரை மணமுடிக்க உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது, ஆனால் எங்கள் மதம் எனக்கு ஒரு பெண்ணை(?) மட்டுமே மணமுடிக்க அனுமதி அளிக்கிறது, அதனால் நான் முதல் தடவையே சிறந்த பெண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்" 

 

இதை அவர் சொல்லி முடித்தவுடன் அரங்கத்தில் பலத்த கைதட்டல்கள். ஜிம்மி ஸ்வாகர்ட், வசீகரமாக பேசக்கூடியவர், அதனாலேயே அவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமிருந்தது. 

 

இந்த விவாதம் நடந்த முடிந்த சில மாதத்தில் ஜிம்மி ஸ்வாகர்ட் ஒரு விபச்சார வழக்கில் சிக்கினார். வாரம் ஒருமுறை விலைமாதரிடம் சென்று வந்திருக்கிறார் அவர். அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய சம்பவம் அது. ஒரே நாளில் அவரது செல்வாக்கு சரிந்து விட்டது. 

 

இந்த சம்பவத்தை பிறிதொரு விவாதத்தில் குறிப்பிட்ட தீதத் அவர்கள் 

 

"அன்று ஜிம்மி ஸ்வாகர்ட் என்னிடம்.....(இங்கு மேலே ஸ்வாகர்ட் பேசியதை போட்டுக்கொள்ளவும்)....என்று கூறினார். இப்போதுதான் தெரிகிறது, அவர் முதல் தடவையே தேர்ந்தெடுத்த பெண் அவருக்கு சிறந்தவளாக இல்லையென்று" 

 

இப்படி சொன்னதுதான் தாமதம். அரங்கம் முழுவதும் சிரிப்பொலி ... 

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP5LHw3-pBJvlQMw78jaD878X5LlAnSyHaCZgQ8jMxdXtIozgVHof9Bv5bZ6uSwOgndDj_evFsKxM0dEjM8yUjDqhlpOluUC3cvKSrfzIgUUgZ2Zfmhs8Jw6wCvGol1ReiH4aS/s320/vlcsnap-83438.png

ஜிம்மி ஸ்வாகர்ட் அவர்களுடனான அதே விவாதத்தில் மற்றுமொரு சுவையான சம்பவம். அஹ்மத் தீதத் அவர்கள் ஒரு வலிமையான வாதத்தை முன்வைத்தார். அது, பைபிளின் சில பகுதிகள் ஆபாசம் நிறைந்ததாக இருக்கிறது என்றும், அந்த பகுதிகளை ஒரு ஆண் தன் மனைவி முன்போ, சகோதரி முன்போ, மகள் முன்போ படிக்க முடியாது என்றும்

 

"இதோ என்னிடம் பைபிளின் அந்த பகுதிகள் (Ezekiel 23) இருக்கிறன, ஜிம்மி ஸ்வாகர்ட் இந்த மக்கள் கூட்டத்தின் முன் அதனை படித்து காட்டட்டும். நிச்சயமாக அவரால் முடியாது. யாராலும் முடியாது. ஏனென்றால் அவை அந்த அளவிற்கு மோசமானவை. அப்படி ஸ்வாகர்ட் படித்துவிட்டால் நூறு டாலர்கள் அவருக்கு" 

 

என்று தன்னிடம் இருந்த அந்த பகுதிகளின் நகல்களை ஸ்வாகர்ட் முன் நீட்டினார். ஸ்வாகர்ட், தீதத் அவர்களின் சவாலுக்கு விவாதத்தில் பதிலளிக்கவில்லை.

 

பின்னர் கேள்வி நேரத்தில் ஒரு நபர் அதே கேள்வியை முன்வைக்க, ஸ்வாகர்ட் அவர்களுக்கு தர்மசங்கடமாய் போயிற்று. சிறிது நேரம் அமைதி காத்தவர், பின்னர் எழுந்து வந்து அந்த பகுதிகளை படிக்க தயாரானார். ஆனால் அஹ்மத் தீதத் அவர்கள் கொடுத்த நகலை படிக்கவில்லை, சிறிது நேரம் அஹ்மத் தீதத் அவர்கள் கொடுத்த நகலை உற்று நோக்கியவர், பின்னர் என்ன நினைத்தாரோ தன்னுடைய பைபிளில் இருந்து படிக்க ஆரம்பித்தார்.

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும், தீதத் அவர்கள் கொடுத்தது சமீபத்தைய பைபிள் பதிப்பிலிருந்து (New International Version) எடுத்தது. அதனுடைய ஆங்கிலம் எளிமையாக இருக்கும், யாருக்கும் சட்டென புரிந்துவிடும்.

 

ஆனால் ஸ்வாகர்ட் அவர்கள் படித்ததோ பழைய ஆங்கிலம் கொண்ட கிங் ஜேம்ஸ் பதிப்பு (King James Version) அதனுடைய ஆங்கிலம் சட்டென புரியாது. தீதத் அவர்களும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, எதையாவது படிக்கட்டும், உண்மை மக்களுக்கு (சிறிதளவாவது) தெரிந்தால் போதும் என்று இருந்து விட்டார் போலும்.

இங்கு மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். எப்போதும் ஒரு வித வசீகரத்துடன் நிறுத்தி நிதானமாய் பைபிளை வாசிக்கும் ஸ்வாகர்ட் அவர்கள், அந்த பகுதியை வேகமாய் படித்தார், ஒருவித பதற்றத்திலேயே அந்த நேரத்தை கையாண்டார். படித்து முடித்தவுடன் நூறு டாலர்களை பெற்றுக்கொண்டு அதை அந்த அரங்கத்திற்கு வாடகை கட்ட தன்னாலான தொகை என்று கொடுத்துவிட்டார்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiStG_M6TB2NjJ4BHszYw8vrOV3esBoCkmb5lIwAvuBIZ_1ERVgYYLeFx3sQn3lRggRNHGHWXgPm8t2-zjlVDoj3nCIEgFuHXFzjeSLQQqopc5-FOamvK3Y14o4kf5ccLAmWJG0/s400/vlcsnap-498005.png

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRdb25M9ZNo16Q6On3eYueJ4p84qhFnBfKCNtsOKdN6tSsfX-EkeBfmONQvGA8hNPIkuMxm8PdWQisdGkeuc0hwFeXelKmosrcywdECg6hOpF9x0p1Tu9S-eZFJX3mY0k_GaST/s400/vlcsnap-498122.png


அஹ்மத் தீதத் அவர்களுக்கும் மகிழ்ச்சி. பின்ன இருக்காதா என்ன, இது தானே அவர் எதிர்பார்த்தது... கிருத்துவ மக்கள் அதிக அளவில் குழுமி இருந்த அரங்கத்தில் அவர்களது ஆளை வைத்தே தன் காரியத்தை சாதித்து கொண்டாரே...                              



2. Ahmed Deedat and Pastor Stanley Sjoberg, at Stockholm Sweden, Oct 1991.
Debate Title: Is the Bible the true word of God? 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfDXIYHw3H44Q70NB-r2KyKqKVGkPujV5Y4EnKw0Lhnk9xPmqGCH4mnbn92MyyI36r6CwzzHMcEQPJSBDIa-Ab0KmVwuGosNaKrLVRuTeyMGnMKcnfGeWzHJ5W2kvv9jBh-M2z/s320/vlcsnap-500840.png

ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் (Stockholm), பாஸ்டர் ஸ்டான்லி சொபர்க் (Paster Stanley Sjoberg) அவர்களுடன் தீதத் அவர்கள் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இரண்டு விவாதங்களில் கலந்து கொண்டார். விவாதங்களில் தீதத் அவர்கள் பாஸ்டரை மிகுந்த தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினார், அல்லது ஒருவழி பண்ணிவிட்டார் என்றே கூறலாம். பாஸ்டர் அவர்கள் தீதத் அவர்களின் வாதத்தால் மிகுந்த உணர்ச்சிவச  பட்டுவிட்டார்.

சர்ச்சில் நடந்த முதல் விவாதத்தில், ஆரம்பத்திலேயே தீதத் அவர்கள் பாஸ்டரிடம் பல பைபிள்களை காட்டி (Catholic Bible, Scofield Bible, Revised standard version (RSV) bible 1952 version, RSV bible 1971 version)

"தாங்கள் இதில் எது உண்மையான கடவுளின் வார்த்தை என்று சொல்லுகிறீர்களோ அதனை வைத்தே நான் விவாதத்தை தொடங்க விரும்புகிறேன்" என்று கூற,

பாஸ்டர் அவர்களோ இதற்கு தன் நேரத்தில் பதில் கூறுவதாக சொன்னார். ஆனால் அவருடைய நேரத்தில் பதில் கூறவே இல்லை. தீதத் அவர்கள் அந்த கேள்வியை கேட்டதற்கு காரணம், அவர் காட்டிய அனைத்து பைபிள்களும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டவை.

பின்பு, தீதத் அவர்கள் அவருடைய நேரத்தில்,

"பாஸ்டர் அவர்களை இப்போதே ஒரு சோதனைக்கு அழைக்கிறேன். இதோ என்னிடம் இரண்டு பைபிள்கள் உள்ளன, இரண்டும் RSV பைபிள்கள்தான். ஒன்று 1952 ஆம் ஆண்டு பதிப்பு, மற்றொன்று 1971 ஆம் ஆண்டு பதிப்பு. பாருங்கள் இரண்டையும்....இரண்டும் ஒன்றாக இருப்பது போல் தானே இருக்கிறது...ஆனால் இரண்டும் ஒன்றல்ல...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiE6z6ICXRZmGpERpyOp3w3X4q91IRSsJuCvdvGEBUhnoCOLaUgOTcrMgyJ4q60rel2dmiGGQRH2jXoBFKC8Skf0gMibCp6DNuX7aqZpoOf56mr0lY_g8j1vEf7bCS_v26tioe7/s400/vlcsnap-500271.png



பாஸ்டர் அவர்களிடம் நான் இதில் ஒரு பைபிளை கொடுக்கிறேன்...

பாஸ்டர், நீங்கள் அந்த பைபிளில் Book of Isiah 37 யை பாருங்கள். என்னிடம் உள்ள மற்றொன்றிலிருந்து நான் படிக்கிறேன். நான் படிப்பது உங்களிடத்தில் உள்ள பைபிளில் அப்படியே இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் "

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjx9KW3K1AebV6EMQCiwCuIDaPmjIvr9okaLHkxctMWkGathm7hcBOrIOuixtRwCdgLUQn41fNR5Yy_pjwk3yR-u8ZQ9vPhuSxMHAbu43f_iw67L1iRM5vSsUTwULy3A8wDzHfP/s400/vlcsnap-44630.png



என்று ஆரம்பிக்க விவாதம் படு சுவாரசிய கட்டத்தை எட்டியது...

தீதத் அவர்கள் ஒரு RSV பதிப்பில் இருந்து படிக்க ஆரம்பிக்க, பாஸ்டர் ஸ்டான்லியும் அவரிடம் உள்ள பைபிளில் அதனை சரிப்பார்த்துக்கொண்டே வந்தார். எல்லாம் ஒரே மாதிரி தான் இருந்தன.

"எல்லாம் ஒரே மாதிரிதானே இருக்கின்றன?...நீங்கள் படிக்கின்ற Book of Isiah 37 அப்படியே தானே இருக்கிறது" என்று பாஸ்டர் கூற...

அஹ்மத் தீதத் அவர்கள் போட்டார் பாருங்கள் ஒரு போடு....

"ஆனால் மிஸ்டர் பாஸ்டர், நான் இவ்வளவு நேரம் தாங்கள் நினைத்து கொண்டிருப்பது போல் Book of Isiah 37 யை படிக்கவில்லை, நான் படித்து கொண்டிருந்தது Book of Kings "

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3jYj27vwcTHPBrR1tgIoW23XIyci6qA6Du9Tk4wge3B9z0SsVuvn41-vLhCI9mWd6UWPWK6mTeofXmUCzf23rY2XCGMNvCQn7ch4eXVWvhV_wbc848OHb2mRqRW28z5LW3uRg/s400/vlcsnap-44982.png

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgftgKwMHQ2l0bwUPEg9vAiPNBPl14gludx4shqTXikSVVligx74tcpLSkG4vXM253tEK7zOaTNsKr3IWmu39fYWPcJ_Kjct86ystTKb8-InlIYbs7h_83EHy0wtf_DhpsmWcGj/s400/vlcsnap-70923.png



என்று சொல்லி பாஸ்டரிடம் அதை காட்டினாரே  பார்க்கணும் , பாஸ்டர் அவர்கள் என்ன சொல்லுவது என்று தடுமாற, அரங்கமோ கைதட்டல்களால் அதிர்ந்தது.  

                         
அதே விவாதத்தின் கேள்வி நேரத்தில், ஒரு சகோதரர் பாஸ்டர் ஸ்டான்லியிடம், பைபிளில், ஏசுவிடம் உண்மையான நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு கிருத்துவன் விஷம் குடித்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகாது என்று இருப்பதாகவும் (Mark 16:18), தான் கையோடு விஷம் கொண்டு வந்திருப்பதாகவும், அதை பாஸ்டர் ஸ்டான்லி குடித்து ஏசுவின் மீதான தன் நம்பிக்கையை நிரூபித்து காட்டவேண்டும் என்று விஷம்(?) நிறைந்த ஒரு பாட்டிலை பாஸ்டர் முன் நீட்டினார்.  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGkvnEXUucjkHlO0NqRFDOB2rUSc951lMDN5u8e2NNWbjvv4d-ms0ZiIWDAQdPLmTgXMvR1Q9X5SJQIlV8r4XVZSQIWnIZtB3gUkarTmlJQCDl4vB-wOlqasM9dfXmkSM19FIb/s400/vlcsnap-84412.png



அதை வாங்கிய ஸ்டான்லி அவர்கள்,  ஒரு டம்ளரில் அந்த திரவத்தை ஊற்றி,

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUuBtIMk7kUtHMWhs-aEImjVtCxq7DUEqU2A0rQhyphenhyphenlwL4E1CBAuIhgZqwKzDMpF8jVRKFtTdTlWyMWvdLWed3AtLFPUXXpJbJKVI7xKLD7gcnrDqiUxOo8PJPmD5NdMAp8CKXf/s400/vlcsnap-86897.png

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjY9m-5bFC0UAlWlGyPYYYIIb8UIBAMbPQHKlaFpJdGFUBHy-LcV6VXczC3k7mhQNyjP02S0DwPJoukYOEJABg3x3Oow1htaCf4WgtPrWdpXWJUmKTitNdjKLlUE_NVhGLsfT5Q/s400/vlcsnap-87536.png



"இதை ஊற்றும்போது உடம்பு சிறிது நடுங்குகிறது. ஆனால் நான் இதை குடிக்கப்போவதில்லை. இது நிச்சயமாக சாத்தானின் செயல், இந்த கேள்வியை கேட்ட மனிதரின் ரூபத்தில் நான் சாத்தானை காண்கிறேன். அதனால் நான் சாத்தானுக்கு கட்டுப்பட போவதில்லை"

என்று கூறி அந்த திரவத்தை குடிக்க மறுத்து விட்டார். இந்த சவாலின் போது மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டார் அவர். பார்வையாளர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்று நாம் எண்ணி பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.    


3. Ahmed Deedat and Dr.Anis Shorrosh, at Royal Albert Hall London, December 1985.
Debate Title: Is Jesus God?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6Kru0nxy-NpNIOSxb4ErUS4zm7BXK-d363DPEuCMUZZMKeeqWRnb3GpoBkHXzdNwlzDkzvW8LngBjsvGJgolbDRWQ3T0seCduipa3oTPmeVzQDZ9Dtx7jb0v38ka7CMN_vLeI/s320/vlcsnap-512973.png

பாலஸ்தீனத்தில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற கிருத்துவ மிசனரியான அனீஸ் ஷரோஷ் (Anis Shorrosh) அவர்கள் ஒருமுறை அஹ்மத் தீதத் அவர்களை விவாதத்திற்கு அழைத்தார். லண்டனின் பிரசித்தி பெற்ற ராயல் ஆல்பர்ட் ஹாலில் நடந்த இந்த விவாதம் பிரபலமானது.

ராயல் ஆல்பர்ட் ஹால் மிகப்  பெரியது. இருந்தும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர் வரை இடம் கிடைக்காததால் திரும்பி சென்றதாக விவாதம் துவங்கும் முன் அறிவிக்கப்பட்டது.

விவாதத்தின் தலைப்பு இதுதான் "ஏசு கிறிஸ்து கடவுளா?"

விவாதத்தின் நடுவில் அஹ்மத் தீதத் அவர்கள் மக்கள் கூட்டத்தை பார்த்து கேட்டார்,

"ஏசு, பைபிளில், நான் தான் கடவுள் என்னை வணங்குங்கள் என்று எப்போதாவது கூறி இருக்கிறாரா? அல்லது நானும் இறைவனும் ஒன்றுதான் என்றாவது கூறி இருக்கிறாரா?, இதற்கு இந்த கூட்டத்தில் உள்ள கிருத்துவர் யாராவது பைபிளில் இருந்து ஆதாரம் காட்ட முடியுமா" என்று கேட்க

கூட்டத்தில் இருந்து ஒரு குரல் "ஆம் இருக்கிறது, John 14 சொல்லுகிறது, I and My father are one"

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgutS6thMu3xsElF4BiNblPLbwXqthwIKGaZR09Mv75X7p6sJTODrrdtyjEy_naM3-0pfBvrPwfapv3LQpPj804oaN0EBcUZkW3rnVM5McOh3d3swxAleDKn1BplrU-GNKKULde/s400/vlcsnap-511363.png



இதை கேட்டவுடன் தீதத் அவர்களின் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு கிருத்துவ போதகர் "சரியாக சொல்லப்போனால் அது John 14:6" என்று கூற,

தீதத் அவர்கள் தன் பைபிள் அறிவை இங்கு காட்டினார் பாருங்கள்....

"நீங்கள் இருவருமே தவறு. அது John 14:6 அல்ல, அது John 10:30"

என்று கூறியது தான் தாமதம், பலத்த கைதட்டல்கள். பிறகு அந்த வசனத்திற்கு அற்புதமாக விளக்கமளித்தார். அவர் யாராவது இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று தான் சவால் விட்டிருக்கிறார்.

அந்த விவாதம் முழுவதும் அனீஸ் ஷரோஷ் அவர்களால் தீதத் அவர்களின் எந்த ஒரு கேள்விக்கும் சரிவர பதிலளிக்க முடியவில்லை.


4. Ahmed Deedat and Reverend Eric Bock, at Copenhagen Denmark, November 1991.
Debate Title: Is Jesus God?

டென்மார்க்கின் தலைநகரான கோபென்ஹேகனில் (Copenhagen), அஹ்மத் தீதத் அவர்களுக்கும் ரெவரண்ட் எரிக் போக் (Reverend Eric Bock) அவர்களுக்கும் இடையே விவாதம் நடைப்பெற்றது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7Tz24EvjwUyaCeFMYY4LarTPHy0SBfFyc5cQamn69L6bHNgslIwtrR4t6UWQNPUa758uciCKWFqq6xmI5C55ciHjw_KZEzM8_RPeyGdFFatqR6wamkeOChrp2sRCTNL7u4S4o/s320/vlcsnap-505881.png

ஆனால் எரிக் அவர்கள் ஏசு கடவுள் என்பதை தன்னால் நிரூபிக்க முடியாது என்று கண்ணியமாக சொல்லிவிட்டார். தீதத் அவர்களும் எரிக் அவர்களது நேர்மையை பாராட்டுவதாகவும், எரிக் ஒரு உண்மையான கிருத்துவர் என்றும் புகழாரம் சூட்டினார்.


கேள்வி நேரத்தில் ஒரு வயதானவர் எரிக் அவர்களிடம்,பைபிளின் எந்த இடத்திலாவது, ஏசு, தான் கடவுளின் மகன் என்று கூறி இருக்கிறாரா என்று கேட்க, அதற்கு எரிக் அவர்கள் தன்னால் இந்த கேள்விக்கு பதிலளிக்க இயலவில்லை என்றும், இதற்கு பதிலளிக்க பார்வையாளர் கூட்டத்தில் இருந்த தன் நண்பரான ஒரு பாஸ்டரை உதவிக்கு அழைப்பதாகவும் கூறினார்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2w2wojWF6LsnunXLG9AJsuldkSeiVcilohBfnBWPAEG_QJ7vBztKmj7vK8mKN3qAmma8ihgTQ4lsmTk87VR9Gq_QwszwDX6vFJbms9KhHYOkCNi2SRPSifrY87a3Ulx924AKi/s320/vlcsnap-505670.png



அந்த பாஸ்டரும் பைபிளில் எந்த ஒரு இடத்திலும் ஏசு அப்படி கூறவில்லை என்று ஒப்புக்கொண்டார். பின்னர் எரிக் அவர்களும் பாஸ்டரும் சேர்ந்தே கேள்விகளுக்கு பதிலளித்தனர்.    

அஹ்மத் தீதத் அவர்களின் கேள்விகள் கூர்மையானவை, அவரால் நன்கு ஆராயப்பட்டவை. அதனால் அவரது எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிப்பது என்பது கிருத்துவ மிசனரிகளுக்கு எளிதானதல்ல. நான் இதுவரை கண்ட அவரது விவாதங்களில் கிருத்துவ மிசனரிகள் அவரது கேள்விகளுக்கு திருப்திகரமாக பதிலளித்ததாக எனக்கு நினைவில்லை.

அஹ்மத் தீதத் அவர்களின் கடைசி ஒன்பது ஆண்டுகள் சோதனையானவை. 1996 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்க பட்டார்.கண்களையும் தலையையும் தவிர வேறெதையும் அசைக்க முடியாத நிலை. பேசக்கூட முடியாது. இறைவனின் அவருக்கான கடைசி கட்ட சோதனை.

இங்குதான் அவர் தன் மன உறுதியை நமக்கு பாடமாக அளித்தார். அந்த ஒரு மன உறுதியை இறைவன் நமக்கும் அளிப்பானாக...ஆமின்.

ஆம்... அந்த ஒரு நிலையிலும் தன் தாவாஹ் பணியை தொடர்ந்தார். ரியாத்தில் கண்கள் மூலம் கருத்தை தெரிவிக்கும் கலையை கற்றார். அதன் மூலம் எண்ணற்றவர்களை தாவாஹ் பணியை மேற்க்கொள்ள உற்சாகப்படுத்தினார். அவரது துணைவியார்தான்  அவரை கவனித்துக்கொண்டார். தீதத் அவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த காலங்களில் எந்த ஒரு வலியையோ வேதனையையோ உணரவில்லை என்று அவரது துணைவியார் தெரிவித்திருக்கிறார்கள்.எப்போதும் போல் உற்சாகமாகவே இருந்திருக்கிறார். அல்ஹம்துலில்லாஹ்....

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த எண்ணிய கிருத்துவ மிசனரிகள் தீதத் அவர்களை கிருத்துவத்திற்கு மாற்ற எடுத்த எந்த ஒரு முயற்சியும் பலனளிக்க வில்லை. ஒருமுறை ரெவரண்ட் நைடூ (Reverend Naidoo) அவர்கள் தீதத் அவர்களது வீட்டிற்கு சென்று, தன்னை பைபிளில் இருந்து ஒரு வாசகத்தை படிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், ஏசுவின் நாமத்தால் தான் அவரை குணமாக்குவதாகவும் கூறினார். ஆனால் தீதத் அவர்களோ, அவரிடம் (கண்கள் மூலமாக தகவலை தெரிவிக்கும் யுக்தியை கொண்டு) பைபிளின் ஒரு பகுதியை மேற்க்கோள் காட்டி, அதனை விளக்க முடியுமா? என்று கேட்க நைடூ அவர்கள் தீதத் அவர்களின் ஈமானைப் பார்த்து அதிர்ந்து விட்டார். பதிலேதும் சொல்லாமல் திரும்பி விட்டார்.

இப்படியாக படுக்கையிலும் அதே உற்சாகத்தை காட்டினார். இன்றளவும் அவர் துவங்கிய IPCI, தீதத் அவர்கள் விட்டுச் சென்ற பணியை சிறப்புற செய்து வருகிறது. சுபானல்லாஹ்...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSCnxdlpDNdAEPlho9LMnj4YJIKR8I04CZ9EmllaD5BPy-23xT0YoWnb5ynNFGW5yPO6pEdKXaZyuffMwq7Yro38ZKzZBCLaPQuT5cHnRCfra3nHuFtOhYrvtqIuVUuHGO1yN2/s640/howmuchblood.jpg


அஹ்மத் தீதத் அவர்களை பற்றி பேசக்கூடிய பலரும் அவர் பின்னல் இருந்த இரு முக்கிய நல்லடியார்களை மறந்து விடுகிறார்கள். அவர்கள், அஹ்மத் தீதத் அவர்களின் இன்பத்திலும் துன்பத்திலும் கூடவே இருந்தவர்கள். தீதத் அவர்களின் நெருங்கிய தோழர்களான குலாம் உசேன் வாங்கர் மற்றும் தாகிர் ரசூல் தான் அவர்கள்.

இறைவன் நமக்கு என்ன சோதனை அளித்தாலும், அஹ்மத் தீதத் அவர்களுக்கும், அவரது தோழர்களுக்கும் கொடுத்தது போன்ற மன உறுதியையும் சேர்த்தே கொடுப்பானாக...ஆமின்..

அஹ்மத் தீதத் போன்று கிருத்துவ மிசனரிகளை வெற்றிகரமாக எதிர்க்கொண்டவர்களில் என்னைக் கவர்ந்த மற்றொருவர், கனடாவைச் சேர்ந்த டாக்டர். ஜமால் பதாவி (Dr.Jamal Badawi) அவர்கள். இன்ஷா அல்லாஹ், இறைவன் நல்ல உடல்நலத்தை கொடுத்தால் அவரைப்பற்றி மற்றுமொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்...      

இறைவன் நம் எல்லோருக்கும் என்றென்றும் இஸ்லாத்தில் நிலைத்திருக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக..ஆமின்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Official Website of IPCI:
1. Ahmed-deedatdotcodotza

Ahmed Deedat's Debate Videos and Other Lecture Videos can be Downloaded at: 
1.Truthwaydottv

My Sincere thanks to:
1. IPCI, Durban, South Africa.
2. Truth Way Broadcasters.

References: 

1. Ahmed Deedat's debate with Tele Evagelist Jimmy Swaggard on the topic "Is the Bible the word of God?" at University of Louisiana, November 1986.
2. Ahmed Deedat's debate with Pastor Stanley Sjoberg on the topic "Is the Bible true word of God?" at stockholm Sweden, Oct, 1991.
3. Ahmed Deedat's debate with Dr.Anis Shorrosh on the topic "Is Jesus God?" at Royal Albert Hall London, December 1985.
4. Ahmed Deedat's debate with Pastor Eric Bock on the topic "Is Jesus God?" at Copenhagen Denmark, November 1991.
5. Ahmed Deedat - Wikipedia.
  
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.
aashiq.ahamed.14@gmail.com

https://blogger.googleusercontent.com/tracker/9150490555549564096-5950258316513317019?l=ethirkkural.blogspot.com

Six C's of Character - Yasir Fazaga