Search This Blog

Wednesday, October 03, 2007

வாஸ்துவை நிரூபித்தால் ரூ.5 கோடி சன்மானம்!

வாஸ்துவை நிரூபித்தால் ரூ.5 கோடி சன்மானம்! ஐதராபாத்: "வாஸ்து' என்பதை உண்மை என நிரூபித்தால் ஐந்து கோடி ரூபாய் சன்மானம் வழங்குவதாக ஆந்திராவைச் சேர்ந்த ஒரு அமைப்பு அறிவித்துள்ளது.
"வாஸ்து' சாஸ்திரம் உலகம் முழுக்க மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. நன்றாக இருக்கும் வீட்டை இடித்து மாற்றிக் கட்டுவது, பொருட்களை மாற்றி வைப்பது என பல்வேறு மாற்றங்களை "வாஸ்து' என்ற பெயரில் பரிந்துரை செய்து வருகின்றனர். அதை நம்பி பணத்தை இறைக்கும் நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. ஆந்திராவில் அறிவியல் கருத்துக்களை பரப்பிவரும் ஜன விஞ்ஞான வேதிகா(ஜே.வி.வி.,) என்ற அமைப்பு வாஸ்துவை யாராவது அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் அவர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அமைப்பைச் சார்ந்த வாஸ்து நிஜ நிர்தரண ஐக்கிய வேதிகா கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் டி.வி.ராவ் கூறியதாவது:
மதத்தின் அடிப்படையிலும் பல்வேறு நம்பிக்கைகளின் அடிப்படையிலும் அப்பாவி மக்கள் கொள்ளையடிக்கப்படுகின்றனர். மீன் மருத்துவம் என்ற பெயரில் நடக்கும் சிகிச்சையும் மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி செய்யப்படும் ஏமாற்று வேலை. வீடு கட்டுவது என்பது இடம் மற்றும் கட்டமைப்பை பொறுத்து அமைய வேண்டுமே தவிர வாஸ்து அடிப்படையில் கூடாது. வாஸ்துவுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. வாஸ்து இருப்பதை அறிவியல் பூர்வமாக யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும். யாராவது நிரூபிக்க விரும்பினால் தங்களது விபரங்களை இமெயில் மூலம் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு டி.வி.ராவ் அறிவித்துள்ளார்.

No comments:

Six C's of Character - Yasir Fazaga