Search This Blog

Sunday, September 16, 2007

கர்ப்பத்தில் ஒரு குழந்தை எப்படி உருவாகி வளர்கிறது

கருவாச்சி காவியத்தில் பிரசவம் சொன்னீர்கள்; கர்ப்பத்தில் ஒரு குழந்தை எப்படி உருவாகி வளர்கிறது என்று சொல்ல முடியுமா?
அதோ! ஒரு பெண்ணுறுப்புக்குள் விசிறிப் பாய்கிறது வெள்ளை வெள்ளம். இருபது கோடி முதல் நாற்பது கோடி விந்தணுக்கள் நீயா நானா என்று ஓட்டப் பந்தயம் நடத்துகின்றன.
அதோ! அதோ! சில அணுக்கள் மட்டுமே நீந்தி முன்னேறுகின்றன. அவற்றுள் ஒரே ஓர் அணு மட்டும்தான் கருப்பை அடைந்து முட்டையை முட்டுகிறது.
இதோ! பனிக்குடம் என்ற மூடப்பட்ட பிரபஞ்சத்தில் ஏகாந்தமாய் மிதக்கிறது கருமுட்டை பேரண்ட வெளியில் மிதக்கும் பூமியைப்போல.
நான்காம் வாரத்தில் மூளையும் தண்டுவடமும் நரம்பு மண்டலமும் உண் டாகும்போது அதன் நீளம் என்ன தெரியுமா? ஆறே மில்லிமீட்டர்தான்.
ஐந்தாம் வாரத்தில் ஒரு குண்டூசியின் கொண்டையைப் போல உருண்டு திரண்டு தெரிகிறதே! அதுதான் தலை. அதில் புள்ளி புள்ளியாய் நான்கு பள்ளங்கள்; ரெண்டு பள்ளங்கள் கண்கள்; ரெண்டு பள்ளங்கள் காதுகள்.
வாயும் தாடையும் ஜீரணமண்டலமும் உண்டான ஆறாம் வாரத்தில் மார்பகத்தின் முன்பகுதியில் ஒரு வித்தியாசமான வீக்கம் தெரிகிறதா அதுதான் இருதயம். ‘‘லப்டப் லப்டப்’’ சிற்றொலி கேட்கிறதா? ஏழாம் வாரத்தின் தொடக்கத்திலேயே அது துடிக்கத் தொடங்கிவிடுகிறது. உண்டாகி வளரும் உறுப்புகளுக்கெல்லாம் ரத்தம் அனுப்பத் தொடங்கி விட்டது இருதயம்.
இனிமேல்தான் முகம் உருவாகிறது. இப்போது அதன் நீளம் அரையங்குலம். உற்று நோக்குங்கள். அந்த அரையங்குலப் பிண்டத்தில் கைகால்கள் மொட்டுவிடுகின்றன. நரம்பு மண்டலம் பூரணமாகி, எலும்பு செல்கள் உற்பத்தியாகி, நுரையீரலும் குடலும் கல்லீரலும் சிறுநீரகங்களும் உண்டானதும் பைய முளைக்கிறது பாலுறுப்பு.
பிண்டம் மனித அடையாளம் பெறுவது எட்டாம் வாரத்தில்தான். முகத்தில் மூக்கின்நுனி முகிழ்க்கும்; தாடை தட்டுப்படும்; நாவோடு கூடிய வாய் வாய்க்கும்.
பன்னிரண்டாவது வாரத்தில்தான் பிண்டம் மனித வடிவம் பெறுகிறது. அதோ பாருங்கள்! உடலைவிடத் தலை பெரிதாக இருக்கிறது. அதோ! கண்ணிமைகளும் காதுமடல்களும். முளைத்த கைகால்களை அசைத்துப் பார்க்கிறது குழந்தை. பனிநீர் குடிக்கிறது; சின்னதாய்ச் சிறுநீர் கழிக்கிறது. நாம் எல்லோருமே தெய்வத்தின் கருவறையில் சிறுநீர் கழித்தவர்கள்தாம்.
உடலில் முடிமுளைப்பது பதினாறாம் வாரத்தில்; தலையில் முடி முளைப்பது இருபதாம் வாரத்தில். இப்போது மூட்டு வளரும்; பாலுறுப்பை உற்று நோக்கினால் ஆணா பெண்ணா அடையாளம் தெரியும். விழிதிறக்காத பிள்ளை விரல் சூப்பும்.
இருபத்துநான்காவது வாரத்தில்தான் வளர்ந்த பிள்ளை கண்விழிக்கும்; சுவை உணரும். அதோ பாருங்களேன்! கோமள மொட்டு கொட்டாவி விடுகிறது. இப்போது குழந்தைக்கு ஒலி கேட்கும். தன் தசைச் சுவர்களுக்கு வெளியே உள்ள பிரபஞ்சத்தைச் செவிகொண்டு உணரும்; இசைகேட்டு அசைந்தாடும்.
28 ஆம் வாரத்தில்தான் மூளை பெருவளர்ச்சி பெறுகிறது.
38 ஆம் வாரத்தில்தான் முளைக்கிறது நகம். பெண்ணுறுப்பாயின் படிகிறது; ஆணுறுப்பாயின் விரை கீழிறங்குகிறது.
அதோ தலை கீழாய்த் திரும்பி அது பிறப்பு வாசல் தேடுகிறது. இப்போது குழந்தை தயாராகிவிட்டது _ கர்ப்பக் கிருகம் விட்டு இந்த அற்பக் கிரகம் வருவதற்கு.

No comments:

Six C's of Character - Yasir Fazaga