Search This Blog

Tuesday, July 24, 2007

பிரதிபா பாட்டீல் அம்மையார்.

முஸ்லிம்களின் வரலாற்றை தவறாகப் புரிந்து கொண்ட,பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த - பார்ப்பன எதிர்ப்பு கொள்கைக் குடும்ப கட்டமைப்பைக் கொண்ட,தேர்தல்களில் போட்டியிட்ட போதெல்லாம் வெற்றிக்கனிகளையே பறித்த பிரதிபா பாட்டீல் அம்மையார்.
ஐக்கிய முற்போக்குக்கூட்டணி மற்றும் இடதுசாரிகளின் வேட்பாளராக ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்த பிரதிபா பாட்டீல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்களும் செய்யப்பட்டு விட்டன.
1947-ல் அந்நிய ஆதிக்கத்தின் பிடியிலிருந்து மீண்டு 60 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன் முறையாக இந்தியத் திருநாட்டின் குடியரசுத் தலைவர் பதவியை அலங்க(hரப்பதவிக்கு)ரிக்க இப்போது நாட்டை ஆளும் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி மற்றும் இடதுசாரிகளின் ஆதரவோடு இன்ஷா அல்லாஹ் ஒரு பெண் தேர்தெடுக்கப்படவிருக்கிறார்.
சமீபத்தில் முஸ்லிம் பெண்களின் முக்காடு விசயத்தில் கருத்துக் கூறி ஒட்டு மொத்த முஸ்லிம்களின் கண்டனக்கணைகளை சந்தித்த பிரதிபா பட்டீல் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பார்ப்பன எதிர்ப்பு கொள்கைகளைக் கொண்ட குடும்ப கட்டமைப்பைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது முஸ்லிம்களின் வரலாற்றை சரியாக தெரிந்து கொள்ளாமல் அல்லது தவறாக புரிந்து கொண்டிருப்பது விந்தையாக உள்ளது.
பெண்களின் பாதுகாப்புக் கவசமாகவும் கண்ணியமான உடையாகவும் திகழும் (புர்கா) முக்காடு விசயத்தில் கருத்துக் கூறி ஒட்டுமொத்த முஸ்லிம்களின் அதிருப்தியை சம்பாத்தித்துக் கொண்ட பிரதிபா அம்மையாரின் கடந்த கால வரலாறு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
அவரைப்பற்றிய சுருக்கமான ஆய்வுக்கட்டுரை
மகாராஷ்ரா - ஜல்காவோன் மாவட்டத்தில் 1934 டிசம்பர் 19ம் தேதி பிறந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிபா பட்டீல் சோலங்கி என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இவர் எம்.ஏ., எல்.எல்.பி., பட்டம் பெற்றுள்ளார்.
இதற்கு முன் இருந்த 11 குடியரசுத் தலைவர்களில் ஒவ்வொரு முறை மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அப்பதவியை வகித்துள்ளனர்; 110 கோடியுள்ள இந்திய மக்களில் சுமார் 90 கோடிக்கு மேல் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினராகும்.
மகாராஷ்டிராவின் வடக்கில் உள்ள ஜல்கோயன் எனும் ஊரில் வழக்குறைஞர் தொழில் செய்து வந்துள்ளார். அங்கு கிராமத்து மாணவர்களுக்குப் பயன்தரும் வகையில பொறியியல் கல்லூரியை ஏற்படுத்தி நடத்தி வருகிறார். பார்வையற்றோருக்கு அந்நகரில் தொழில் பயிற்சி பள்ளியையும், ஏழை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்குப் பள்ளி ஒன்றையும் நடத்திவருகிறார்.
கிராமியப் பொருளாதார மேம்பாட்டிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் தனி அக்கறை செலுத்துகிறார் பெண்கள் கூட்டுறவு வங்கியை ஜல்கோயன் நகரில் உருவாக்கியுள்ளார். அவர்களுக்கு என மும்பை, மற்றும் டெல்லியில் தனி விடுதிகளையும் நடத்துகிறார்.
பள்ளி, கல்லூரியில் பயிலும் பொழுது விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்ற பிரதிபா பாடில், 1962ல் சீன ஆக்கிரமிப்பின்போது துணைக் காவல் படையின் தளபதியாகவும் இருந்துள்ளார்.
1966-ல் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் எனும் வேதியியல் பேராசிரியரை, ஜாதி மறுப்பு மணம் செய்து கொண்டவர். இது பெற்றோர் ஏற்பாட்டில் நடந்த திருமணம். ஒரு மகனும் மகளும் இவர்களுக்குப் பிள்ளைகள். தேவிசிங் ஷெகாவத், வித்யபாரதி மகாவித்யாலயா எனும் கல்வி நிறுவனத்தை, மகாராஷ்டிரத்தின் வடகிழக்கில் விதர்பா பகுதியைச் சேர்ந்த அமராவதி நகரில் நடத்துகிறார். அதே நகரில் உழவர் அறிவியல் மையம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு மழலையர் (நர்சரி) பள்ளியையும் பிரதிபா அம்மையார் நடத்துகிறார்.
அமராவதியில் அகில இந்தியக் காங்கிரஸ் மாநாடு 1890களில் நடந்த பொழுது அதற்குத் தலைமை தாங்கியவர், சர்.சங்கரன் நாயர். பின்பு அதிலிருந்து விலகினார். 1921-22ல் காந்தியாரிடம் அவர் கள்ளுக்கடை மறியலை நிறுத்தக் கோரினார். அதற்குக் காந்தியார், மறியலை நிறுத்துவது தம் கையில் இல்லை என்றும், ஈரோட்டுப் பெண்கள் இருவர் (பெரியாரின் துணைவியார் நாகம்மையார், தங்கை கண்ணம்மையார்) கையில் இருக்கிறது என்றும் பதில் கூறினார். முன்பு மத்திய மாகாணத்தில் இருந்த இதே அமராவதியில்தான், இரண்டாவது அகில இந்திய பார்ப்பனர் அல்லாதவர் மாநாடு, பானகல் அரசர் தலைமையில் 1925ல் நடைபெற்றது. (முதல் மாநாடு 1924ல் சர் ஏ. ராமசாமி முதலியார் தலைமையில் பெல்காமில் நடந்தது) மாளவியா, ராஜகோபாலாச்-சாரி, மோதிலால் நேரு ஆகியோர் இந்த மாநாடுகள் தொடர்வதை விரும்பாமல், காந்தியார் மூலம் வல்லபாய் படேலைத் தூது அனுப்பி, பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் இந்திய அளவில் பரவாமல் தடுத்து விட்டனர்.
இந்தச் சூழலில், பிரதிபா அம்மையாரின் துணைவர் தேவிசிங் கூறும் செய்தி ஒன்று கவனத்தில் கொள்ளத்தக்கது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து விதர்பா பகுதியில் குடியேறியுள்ள அவர் குடும்பம், மகாராஷ்டிர அரசியலில் செல்வாக்கு பெற்றதாக இருக்கவில்லை. ஆனால், அவருடைய துணைவியாரின் (பிரதிபாவின்) பெரிய தந்தையார் வழக்கறிஞராகவும், அப்பொழுதைய பம்பாய் மாகாண சட்டப் பேரவையின் உறுப்பினராகவும் இருந்த, தோங்கர்சிங் பாடில் ஆவார். அவர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திவான் பகதூர் விருது பெற்றவர். திவான் பகதூர் தோங்கர்சிங் பாடில், சிவசேனாவின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேயின் தந்தை பிரபோதன் தாக்கரேவுக்கு மிக நெருங்கியவர் எனத் தெரிவிக்கிறார்.
இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பிரபோதன் தாக்கரே பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தில் மிக ஈடுபாடு கொண்டவர் என்பதும், பார்ப்பனியத்தை மறுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு 'மிக நெருக்கமாக' இருந்த பிரதிபாவின் பெரிய தந்தையார் பார்ப்பனர் அல்லாதவர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும் தெரியவருகிறது.
இன்னொரு முக்கியச் செய்தியை, பிரதிபா பாடிலின் துணைவர் தருகிறார். மண்டல் ஆணையம் நிறைவேற்ற ஆணை வந்த பொழுது, மகாராஷ்டிரத்தில் கலவரத்தைத் தூண்டப் பெரு முயற்சி நடந்தது. ஆனால், நாக்பூரில் கூடிய மகாராஷ்டிரச் சட்டப் பேரவையில் சுமார் மூன்று மணி நேரம் புள்ளி விவரங்களுடன் பேசி அக்கலவர முயற்சியை முறியடித்து, அமைதியை நிலை நாட்டியுள்ளார், பிரதிபா பாடில்.
மகாராஷ்டிர சட்டப் பேரவை உறுப்பினராக 1962 முதல் 1985 வரை பதவி வகித்துள்ளார். நகர்ப்புற வளர்ச்சி, வீட்டமைப்பு, கல்வி, சுற்றுலா, சட்டமன்ற நடவடிக்கைகள், பொது சுகாதாரம், சமூக நலம், கலாசாரத்துறை ஆகியவற்றில் அமைச்சராகப் பணியாற்றியவர். துணை அமைச்சராக முதல் அமைச்சரவையில் இடம் பெற்றவர். காபினட் அந்தஸ்துள்ள அமைச்சராக நியமனம் பெறும் அளவுக்குத் திறமையாகப் பணியாற்றியவர்.
மகாராஷ்டிர முதலமைச்சராக சரத்பவார், 1979 ஜூலையில் பதவி வகித்தபோது, எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியவர் பிரதிபா 1985-ல் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு மாநிலங்களவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 நவம்பர் 18 முதல் 1988 நவம்பர் 5 வரை அப்பதவியில் இருந்தார். இதே காலகட்டத்தில் நாடாளுமன்றத்தின் உரிமைக்குழுத் தலைவராகவும் இருந்துள்ளார்.
1988 முதல் 1990 வரை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும்.
1991-ல் அமராவதி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவை, மக்களவை ஆகியவற்றுக்கு போட்டியிட்டபோதெல்லாம் வெற்றிக்கனிகளையே பறித்தவர் பிரதிபா அம்மையார்.
மக்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிந்த பிறகு தேர்தல் பிரச்சாரத்தின் போது தீவிரமாகப் பாடுபட்டவர்.
2004 நவம்பரில் கட்சித் தலைமையே அவரை அழைத்து ராஜஸ்தான் மாநில ஆளுனராக நியமித்தது.

No comments:

Six C's of Character - Yasir Fazaga